அண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் தமக்கிருக்கும் பெரும்பான்மையைக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் இந்தியக் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியிருக்கிறது. இச்சட்டமானது மக்களுக்கான ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் மதசார்பின்மையையும் கால்களில் போட்டு மிதித்துள்ளது. மூன்று நாடுகளிலிருந்து ஆறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருப்பின் அவர்களுக்கு குடியுரிமை வழங்க மேற்படிச் சட்டம் வழிவகுக்கிறது. இச்சட்டமானது முஸ்லிம் மக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே போன்று இலங்கைத் தமிழ் மக்களையும் புறந்தள்ளியிருக்கிறது. அதேவேளை இந்தியாவின் முஸ்லிம் மக்களின் குடியுரிமைக்குரிய ஆதாரங்களையும் கேட்டு நிற்கிறது. இச்சட்டமானது இந்துத்துவா அடிப்படையில் இந்துத்துவ பாசிசச் சட்டமாகவே கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதன் காரணமாக இந்திய மக்கள் நாடுதழுவிய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தலைநகர் புதுடில்லியில் ஜாகியா பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்திய அமைதி எதிர்ப்புப் போராட்டத்தை குண்டர்களும் பொலீசும் இணைந்து கொடூரமாகத் தாக்கியிருக்கிறார்கள். இதற்கு எதிராக எல்லா மாநிலங்களிலும் மக்களும் மாணவர்களும் போராடி வருகிறார்கள். அவர்களது ஒரே கோரிக்கை, பாசிசச் சட்டமான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற்று இரத்துச் செய்யவேண்டும் என்பதேயாகும்.
இந்திய மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள மேற்படிக் கோரிக்கைகளையும் அதற்கான எழுச்சிப் போராட்டங்களையும் எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆதரித்து தனது ஒருமைப்பாட்டினைத் தெரிவித்துக்கொள்கிறது. அதேவேளை இப்போராட்டத்தில் ஈடுபட்ட தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது அரசும் பொலீசும் காவிப்படைக் குண்டர்களும் நடாத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும் போராட்டங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அரச பயங்கரவாதத்தினையும் எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மேலும் நரேந்திர மோடி தலைமையிலான இந்துத்துவ அடிப்படைவாத நிலைப்பாடுடைய பாசிச பா.ஜ.க அரசு காஷ்மீரில் கைவைத்து அதன்பின் பாபர் மசூதி நிலத்தை நீதிம்ன்றத்தின் மூலம் பெற்றபின் இப்போது ஜனநாயகத்திற்கும் மதசார்பின்மைக்கும் பெயர்பெற்றதாகக் கூறப்படும் இந்திய அரசியல் சாசனத்தின் மீதே கைவைத்திருக்கிறது. இந்துத்தீவிரத் தேசியவாதம் பாசிசத்துக்கு இட்டுச்சென்றுள்ளதையே எடுத்துக்காட்டுகின்றது. எனவே இவற்றுக்கெதிராகப் போராடிவரும் மக்களை எமது கட்சி ஆதரித்து நிற்கின்றது.
இவ்வாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியற் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி. கா. செந்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சி. கா. செந்திவேல்
பொதுச்செயலாளர்
New Democratic Marxist Leninist Party